சென்னை, ஜூன்.8: தயாநிதி மாறனுக்கு எதிராக 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் புகார் கூறப்பட்டுள்ளதால் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்தார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான நீதிபதி சிவராஜ் பாட்டீல் கமிட்டியின் அறிக்கையை குறிப்பிட்டுப் பேசிய சுவாமி, ஏர்செல் விவகாரத்தில் பயனாளிகள் நேரடியாக பலனடையவில்லை. ஆனால் நேரடியாக பலனடைந்தவர்களிடம் இருந்து அந்த நிறுவனம் வாங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு தயாநிதி மாறன் தன்னை நிர்பந்தித்ததாக அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சி.சிவசங்கரன் குற்றம்சாட்டியதையடுத்து தயாநிதி மாறன் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மேக்சிஸ் நிறுவனம் தயாநிதியின் சகோதரர் கலாநிதி மாறனுக்கு மிகவும் நெருக்கமானது என்று கூறப்படுகிறது.
திமுகவை குறிவைத்து செயல்படுகிறது காங்கிரஸ் எனக் குற்றம்சாட்டிய சுவாமி, அப்போதுதானே அக்கட்சியை கழற்றிவிட்டு எதிர்காலத்தில் அதிமுகவுடன் கூட்டு சேரமுடியும் எனக் குறிப்பிட்டார்.
மத்திய அமைச்சரவையில் இருந்து ப.சிதம்பரத்தை நீக்க வேண்டும் என சுவாமி வலியுறுத்தினார். சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு விவகாரத்தில் திடீரென பல்டி அடித்ததில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பிய 50 பயங்கரவாதிகள் பட்டியலில் குளறுபடி என சிதம்பரம் தொடர்ந்து பெருந்தவறுகளைச் செய்துள்ளார் என சுவாமி குற்றம்சாட்டினார்.






0 கருத்துரைகள்:
Post a Comment