சமச்சீர் கல்வி திட்டத்தை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளதற்கு இடைக்கால தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது.
சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழக நிறுத்தி வைத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் கொண்ட அமர்வு, தமிழக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்ட திருத்தத்துக்கு நேற்று இடைக்கால தடை விதித்தது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், மாணவர்களின் நலன் கருதி பழைய கல்வி முறையை அமல்படுத்த இந்த நீதிமன்றம் அனுமதி மறுக்கிறது. தமிழக அரசு கொண்டு வந்த சட்ட மசோதாவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக கூறினார். 2011-12ஆம் கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறையையே அமல்படுத்த வேண்டும். அதே நேரம் சமச்சீர் கல்வி பாட புத்தகங்களில் தேவையான பக்கங்களை நீக்கவோ, சேர்க்கவோ தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்த நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. இந்த வழக்கில் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தனர்.
இந்தப் பிரச்சனையில் தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இன்று முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. உயர் நீதிமன்ற உத்தரவால் சமச்சீர் கல்வி முறையை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா ஆகியோர் நேற்றிரவு அவசர ஆலோசனை நடத்தினர்.
அப்போது நீதிமன்ற தடையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகுவது பற்றி கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவு அரசுக்கு கிடைத்த பின்பு இன்று மீண்டும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அப்போது இறுதி முடிவு எடுக்கப்படும். என்றாலும் பள்ளிகள் வருகிற 15ஆம் தேதி திறக்கப்படும் என்ற அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அரசு வழக்கறிஞர்களுடன் டெல்லி விரைந்துள்ளார்.
தற்போது உச்ச நீதிமன்றத்துக்கு கோடை கால விடுமுறை என்றாலும் விடுமுறை கால அமர்வில் மேல்முறையீடு செய்து 15ஆம் தேதி பள்ளி திறப்பதற்குள் நல்ல முடிவை பெற்று விடுவோம் என்று அரசு வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.







0 கருத்துரைகள்:
Post a Comment