சென்னை, ஜூன் 10: இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை எனவும், திமுக ஆட்சியின் போது 7.48 லட்சம் டி.வி.க்களை கொள்முதல் செய்வதற்காக பிறக்கப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கொள்முதல் செய்து வைத்துள்ள 1.27 லட்சம் டி.வி.க்கள் அனாதை இல்லங்கள், அரசு பள்ளிகள், அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை அளித்த பதில்:
2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் உள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 42 லட்சம். அதில் கிட்டத்தட்ட 56 லட்சம் குடும்பங்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளை வைத்திருந்தவர்கள். ஆனால், 1 கோடியே 64 லட்சம் டி.வி.க்களை வழங்கியுள்ளதாக திமுக அரசு கூறுகிறது. தொலைக்காட்சிப் பெட்டி இல்லாதவர்கள் யார் என்ற முழுமையான கணக்கையே முந்தைய அரசு எடுக்கவில்லை.
கடந்த ஜனவரி மாதம் முந்தைய திமுக அரசால் ஆறாம் கட்டமாக 10 லட்சம் டி.வி.க்களை கொள்முதல் செய்ய உத்தரவு வழங்கப்பட்டது.
அவற்றில் இதுவரை கொள்முதல் செய்யப்படாத சுமார் 7 லட்சத்து 48 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கான உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படாத நிலையில் உள்ள 1 லட்சத்து 27 ஆயிரம் தொலைக்காட்சிப் பெட்டிகள் அனாதை இல்லங்கள், அரசு பள்ளிகள், ஊராட்சிகள், அரசு மருத்துவமனைகள், சுகாதார துணை மையங்கள், அங்கன்வாடி மையங்கள் போன்ற அமைப்புகளுக்கு வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: திமுக அரசால் அமல்படுத்தப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நோயாளிகள் அறுவை சிகிச்சை மேற்கொண்டாலும் அதில் சேர்க்கப்படாத இனங்களுக்கான கட்டணங்களை தனியார் மருத்துவமனைகள் பயனாளிகளிடம் இருந்தே பெற்றன.
இந்தக் காப்பீட்டுத் திட்டத்துக்கு இதுவரை வழங்கப்பட்ட மொத்தத் தொகை ரூ.850 கோடி. அதில் அரசு மருத்துவமனைகளுக்கு அளிக்கப்பட்ட தொகை வெறும் ரூ.10.49 கோடி. மீதமுள்ளவை தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றுள்ளன. இந்தக் காப்பீட்டுத் திட்டம் தனியார் மருத்துவமனைகள் அதிகம் வளர்ச்சி அடையவே பயன்பட்டன.
எனவே, இந்தத் திட்டத்தை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக் கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி அனைவரும் தேவையான மருத்துவ வசதி பெறுவதை அரசு உறுதி செய்யும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.







0 கருத்துரைகள்:
Post a Comment