நான்கு மாத குழந்தையின் வயிற்றுக்குள் ஒரு குழந்தை: ஆச்சர்யப்படுத்தும் உண்மை!

பிறந்து நான்கு மாதமே ஆன, ஒரு ஆண் குழந்தையின் வயிற்றுக்குள் முழு வளர்ச்சியடையாத குழந்தை ஒன்று இருந்த சம்பவமானது, எழும்பூர் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள, ஒரு கிராமத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அப்பெண்ணிற்கு ஏற்கனவே, இரண்டறை வயதில் ஒரு குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பிறந்த இந்த குழந்தை பிறந்ததிலிருந்தே, மூச்சு திணறல், சளி, வயிறு வீக்கம், சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் போன்ற பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் குழந்தையின் உடல்நிலை குறித்து, திருவண்ணாமலை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடம் அவ்வப்போது, பரிசோதனை செய்து வந்தனர்.

மருத்துவர்களும் சாதாரண சளி பிரச்சனை தான் என்று கூறி, மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கி வந்தனர். இருப்பினும், குழந்தையின் வயிறு வீக்கம் சரியாகாமல் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்தது.

இதைத்தொடர்ந்து, கடந்த 10ம் திகதி எழும்பூர் அரசு மருத்துவனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றனர். குழந்தைகள் அறுவை சிகிச்சை பேராசிரியர் மாதவன் தலைமையில் மருத்துவர்கள், முத்துக்குமார், சரவணன், பூர்ணிமா ஆகியோர் பரிசோதனை செய்தனர். இந்த குழந்தைக்கு, சிறுநீரக பகுதியில் நீர்கட்டியாக இருக்கலாம் அல்லது புற்றுநோய் கட்டியாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

ஆனால், பரிசோதனையில் எந்த நோயும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையின் வயிற்றுப் பகுதியை அறுவை சிகிச்சை செய்து பார்க்க, மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர். அப்போது, வயிற்றுக்குள் 14 செ.மீ நீளமும், 12 செ.மீ அகலமும் உடைய பெரிய அளவிலான நீர்க்கட்டி ஒன்று சூழ்ந்திருந்தது. அதில் ஒரு லிட்டர் தண்ணீர் தேங்கி இருந்தது என்பது தெரிய வந்தது.

அந்த நீரை வெளியேற்றி பார்த்த போது, முழுவளர்ச்சியடையாத தலை, தலையில் முடி, கை விரல் பகுதி, எலும்பு தண்டுவடம் என்று ஒரு குழந்தை போன்ற கரு இருந்தது. அதை வெளியில் எடுத்த மருத்துவர்கள் எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொண்டனர்.

எக்ஸ்ரே பரிசோதனைக்கு பின்பு, அது குழந்தையின் மண்டை ஓடு தான் என்பதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.

குழந்தையின் வயிற்றுக்குள் இருந்த கருவை அகற்றி விட்டதால், இனி குழந்தைக்கு எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாது என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும், குழந்தையின் வயிற்றில் இருந்த கருவை பரிசோதனைக்காக, ஆய்வு கூடத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஒரு குழந்தையின் வயிற்றுக்குள் இன்னொரு குழந்தை இருப்பது போன்ற ஆச்சர்யமான சம்பவம் ஏற்கனவே, 15 வருடங்களுக்கு முன்பு, எழும்பூர் அரசு மருத்துவமனையில் நடந்து உள்ளது என்று மருத்துவர் முத்துக்குமார் கூறினார். மேலும், ஐந்து லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இது போன்று நடக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

செய்தி:newindianews.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More