டெல்லி,ஜன.19:டெல்லி ஜங்புராவில் நிஸாமுத்தீன் ரெயில்வே ஸ்டேசனுக்கு அருகில் நிலைப்பெற்றிருந்த மஸ்ஜித் அல் நூர் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டது எனக் கூறி திடீரென டெல்லி வளர்ச்சி ஆணையம் இடித்துத் தள்ளியது. ஆனால் மஸ்ஜித் இருந்த 350 சதுரமீட்டர் இடம் வக்ஃபோர்டுக்கு சொந்தமான அடக்கஸ்தலமாக 1975 ஆம் ஆண்டு பதிவுச் செய்யப்பட்டுளது என அரசு குறிப்பில்(கெஜட்) காணப்படுகிறது.


மேலும் 1947-48 ஆம் ஆண்டைய ஜமாபந்தியிலும் (நில உரிமைத் தொடர்பான விபரங்களை பாதுகாக்கும் ஆவணம்) இவ்விபரம் காணப்படுகிறது.டெல்லி உயர்நீதிமன்றம் மஸ்ஜிதை இடித்துத்தள்ள அனுமதி வழங்கவில்லை மாறாக லெஃப்டினண்ட் கவர்னருடைய அலுவலகத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் மத விவகார கமிட்டிதான் மஸ்ஜிதை இடிக்க அனுமதி வழங்கியுள்ளது.
இதுத் தொடர்பாக மத விவகார கமிட்டிக் கூட்டிய கூட்டத்தின் நிகழ்ச்சிநிரலை கேட்டு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி ஜக்காத் ஃப்வுண்டேசன் ஆஃப் இந்தியாவின் சார்பில் மனு அளிக்கப்பட்ட போதிலும் இதுவரை வழங்கப்படவில்லை.
யார் யாரெல்லாம் இக்கமிட்டியில் உறுப்பினர்கள் என்பதைக்கூட டெல்லி மாநில அரசு வெளியிடவில்லை. இத்தகையதொரு மர்மம் நீடிக்கும் வேளையில்தான் கடந்த 12-ஆம் தேதி மஸ்ஜித் அல் நூர் அநியாயமாக இடித்துத் தள்ளப்பட்டது.
ஜங்புரா ரெஸிடண்ட்ஸ் வெல்ஃபெயர் அசோசியேசன் கடந்த 2006 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின்(மனு எண்.9358) அடிப்படையில் உயர்நீதிமன்றம் இவ்விவகாரத்தில் தலையிட்டது. இவ்விடத்திலுள்ள மஸ்ஜித் உள்பட சட்டத்திற்கு புறம்பான கட்டிடங்கள் மற்றும் குவிந்துகிடக்கும் மணல் மேட்டையும் அகற்றிவிட்டு அவ்விடத்தை பசுமையான பகுதியாக மாற்றவேண்டும் என அம்மனுவில் கோரப்பட்டிருந்தது.
கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பரில் டெல்லி வளர்ச்சி ஆணையம்(டி.டி.எ) இப்பகுதியிலுள்ள சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்துத் தள்ளிவிட்டு அல் நூர் மஸ்ஜித் மற்றும் வால்மீகி கோயில் விஷயத்தில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பை மதவிவகார கமிட்டியிடம் ஒப்படைத்தது.
2007-ஆம் ஆண்டு ஜனவரியில் டெல்லி உயர்நீதிமன்றம் அப்பகுதியின் வளர்ச்சிக் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள டெல்லி மாநகராட்சி மற்றும் டெல்லி வளர்ச்சி ஆணையத்திற்கும் உத்தரவிட்டது.
2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30-ஆம் தேதி உயர்நீதிமன்ற உத்தரவின்படி சட்டத்திற்கு புறம்பான கட்டிடங்களையும், குவிந்துக் கிடந்த மணலையும் அப்புறப்படுத்தியதாக டெல்லி மாநகராட்சி தெரிவித்தது. ஆனால், மஸ்ஜித் உள்பட அனைத்து சட்டத்திற்கு புறம்பான கட்டிடங்களையும் அப்புறப்படுத்த வேண்டுமெனக்கோரி மீண்டும் ஜங்புரா ரெஸிடண்ட்ஸ் வெல்ஃபெயர் அசோசியேசன் 2008 ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியது.
எல்லா சட்டத்திற்கு புறம்பான கட்டிடங்களையும் அப்புறப்படுத்த வேண்டுமென டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 2008 ஜூலை 9-ஆம் தேதி உத்தரவிட்டது.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கூடிய மதவிவகார கமிட்டி அல் மஸ்ஜிதை இடிக்கவும், வால்மீகி கோயில் இருந்த இடத்தை கோயிலுக்காக ஒதுக்கவும் சிபாரிசுச் செய்தது. இதனடிப்படையில்தான் மஸ்ஜிதை இடித்துத் தள்ளுவதற்கான நடவடிக்கைகளை டி.டி.எ மேற்கொண்டது.
2009 ஆகஸ்ட் மாதம் முதல் இதற்கான முயற்சிகளை டி.டி.எ மேற்க்கொண்டு வருகிறது. ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பு மூலம் மஸ்ஜிதை டி.டி.எவால் இடிக்க இயலவில்லை. இதனைத் தொடர்ந்து ஜங்புரா ரெஸிடண்ட்ஸ் வெல்ஃபெயர் அசோசியேசன் டெல்லி மாநகராட்சி மற்றும் டெல்லி வளர்ச்சி ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடுத்தது.
மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடம் வக்ஃபோர்டுக்கு சொந்தமானது எனக் கூறி அதற்கான ஆவணங்களை 2010 அக்டோபர் 26-ஆம் தேதி டி.டி.எவிடம் அளித்திருந்தது. ஆனால், இதனை பரிசீலிக்காமல் மஸ்ஜிதை இடித்துத் தள்ளியுள்ளது டி.டி.எ. பின்னர் அனைத்து சட்டத்திற்கு புறம்பான கட்டிடங்களையும் இடித்துத் தள்ளியதால் தங்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ்பெற வேண்டுமெனக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளது டி.டி.எ.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்






1 கருத்துரைகள்:
<> செய்வது ஒரு கூட்டம் தடுப்பதும் அதே கூட்டமா என்று சந்தேகம் எழுகிறது.......!?
Post a Comment