அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கெதிராக பாகிஸ்தானில் கண்டனப் பேரணி

இஸ்லாமாபாத்,ஜன.24:பாகிஸ்தானில் வடக்கு வசீரிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்களை(ட்ரோன்) கண்டித்து பழங்குடி மக்கள் கண்டனப் பேரணியை நடத்தினர்.

கடந்த 3 தினங்களுக்கிடையே நடைபெறும் இரண்டாவது போராட்டமாகும் இது. மிரான்ஷாவில் நடந்த பேரணியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

இதற்கிடையே அப்பிராந்தியத்தில் தத்தாவேல் பகுதியில் அமெரிக்கா நடத்திய இரண்டு ஆளில்லா விமானத் தாக்குதலில் ஏழு போராளிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தோகா மடோக்கல் கிராமத்தில் போராளிகளின் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு பேரும், மோட்டார் சைக்கிளில் நடந்த தாக்குதலில் 3 பேர்களும் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல்களைக் கண்டித்து மில் அலியில் கடைகள் மூடப்பட்டன. சாலையில் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.

அமெரிக்கா போராளிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறிவிட்டு அப்பாவி மக்களை கொன்று குவிப்பதாக கண்டனப் பேரணியில் பங்கேற்று பேசிய பழங்குடி தலைவர்களும், வர்த்தகர்களும், மாணவர்களும் குற்றஞ்சாட்டினர். இத்தகைய தாக்குதல்கள் அப்பிராந்தியத்தில் வாழும் மக்களை கடுமையாக பீதி வயப்படுத்தியுள்ளதாக வர்த்தக அமைப்பு ஒன்றின் தலைவர் அப்துல் ஹகீம் கூறுகிறார்.

மஸ்ஜிதிலோ அல்லது கலாச்சார நிகழ்ச்சிகளிலோ சென்றால் தாக்குதல் நடந்துவிடுமோ எனப் பயந்து அங்கு செல்லமுடிவதில்லை என மாணவர் அமைப்பின் தலைவர் அப்துல் ரவூஃப் கூறினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துரைகள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More